மின்சார ரீடிங் எடுக்கச் சென்றபோது அத்துமீறல்; 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், மின்துறை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு


மின்சார ரீடிங் எடுக்கச் சென்றபோது அத்துமீறல்; 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், மின்துறை ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2019 11:10 PM GMT (Updated: 15 May 2019 11:10 PM GMT)

மின்சார ரீடிங் எடுக்கச் சென்ற போது வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியை பாலியல் பலத்காரம் செய்துவிட்டு தப்பிய மின்துறை ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வீரய்யன். இவருடைய மகன் வினோத் (வயது 26). அரசு மின்துறை ஊழியர். இவருக்கு வீடு வீடாகச் சென்று மின்சார மீட்டரில் ரீடிங் கணக்கெடுத்து உபயோகிப்பாளர்களுக்கு மின்கட்டண பில்போடும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாகூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று வீடுகளில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, ஒரு வீட்டில் 4-ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டார். இந்தநிலையில் அந்த சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என வினோத் கேட்டுள்ளார்.

உடனே அந்த சிறுமியும் வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றாள். அப்போது, வினோத் வீட்டுக்குள் சென்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி பயந்து அலறி கூச்சல்போட்டார். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு வினோத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அந்த சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமியை சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையைத் தொடர்ந்து மின்துறை ஊழியர் வினோத் மீது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மின்சார ரீடிங் கணக்கெடுக்க வந்த மின்துறை ஊழியர் வீட்டில் தனியாக சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story