தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 11:32 AM GMT)

தூசி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூசி, 

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் விநாயகாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் பகுதிகளில் உள்ள தனியார் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி மீனா, குழந்தைகள் கவுதம், நிக்கில் ஆகியோருடன் கடந்த 10–ந் தேதி இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். கார்த்தி சுற்றுலா சென்றிருந்த நேரத்தில் மீனாவின் தந்தை பிரகாசம் வீட்டினை கவனித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் பிரகாசத்தின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் கார்த்திக் வீட்டிற்கு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கார்த்தி அப்துல்லாபுரத்திற்கு திரும்பினார். கிராமத்தின் அருகே வரும்போது தனது மாமனார் பிரகாசத்திற்கு போன் செய்து வீட்டின் சாவியை எடுத்து வந்து வீட்டு திறந்து வைக்குமாறு கூறியுள்ளார்.

அப்போது பிரகாசம் வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கார்த்திக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த கார்த்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையிலும், ஹாலிலும் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 48 பவுன் நகைகளும், ரூ.80 ஆயிரமும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.

இதுகுறித்து கார்த்தி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்– இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story