திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி


திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 9:00 PM GMT)

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இங்கு வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்படுகிறது. ஒரு மேஜைக்கு நுண்பார்வையாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 42 பேர் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிக்கு 252 பேர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோல் தபால் வாக்கு எண்ணுவதற்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 4 மேஜைகள் போடப்படுகிறது. 1 மேஜைக்கு 4 பேர் நியமிக்கப்பட்டு 16 பேர் இருப்பார்கள். 6 சட்டமன்ற தொகுதியில் 96 பேர் தபால் வாக்குகளை எண்ண இருக்கிறார்கள். மேலும் 20 சதவீதம் பேர் மாற்றுப்பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும், தபால் வாக்குகள் மற்றும் ராணுவ வீரர்களின் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும், நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாக்கு எண்ணும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரிகள் சுகுமார், மீனாட்சி சுந்தரம் (நெடுஞ்சாலைகள்), கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாஷியம்(தேர்தல்), கீதா பிரியா(பொது), தேர்தல் தாசில்தார் முருகதாஸ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story