நெடுவாசல் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


நெடுவாசல் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 20 May 2019 10:30 PM GMT (Updated: 20 May 2019 8:03 PM GMT)

நெடுவாசல் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரை அடுத்துள்ள நெடுவாசல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் மகா மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் மகா மாரியம்மனுக்கு மலர்களால் சிறப்பான அலங்காரம் செய்யப் பட்டது.

தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசை, மேளம், செண்டை மேளம் முழங்க மகா மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருள செய்யப்பட்டது. பின்னர் திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும், வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திரளான பக்தர்கள்

அதை தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் பக்தி பாடல்கள் பாடிய படி, தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வந்து, நிலையத்தை வந்தடைந்தனர். தேரோட்ட விழாவில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மருவத்தூர் போலீசார் ஈடுபட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. இரவில் நாடகம் நடக்கிறது. 

Next Story