ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: நர்சின் தம்பியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: நர்சின் தம்பியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 8:50 PM GMT)

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான நர்சு அமுதவள்ளியின் தம்பியை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் கைதான 7 பேர் சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறியவும், குழந்தைகளின் பெற்றோரை கண்டுபிடிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமுதவள்ளி, ரவிச்சந்திரன், டிரைவர் முருகேசன், செவிலியர் உதவியாளர் சாந்தி, அழகுகலை நிபுணர் ரேகா, அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார் மற்றும் புரோக்கர் லீலா ஆகிய 7 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் அமுதவள்ளி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே ஒருமுறையும், புரோக்கர் லீலாவின் ஜாமீன் மனு 2 முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவலில் விசாரிக்க அனுமதி

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்த அமுதவள்ளியின் தம்பி நந்தகுமாரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் நேற்று முன்தினம் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கருணாநிதி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து நந்தகுமாரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story