சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க. வெற்றி


சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 23 May 2019 11:15 PM GMT (Updated: 23 May 2019 9:29 PM GMT)

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி பெற்று உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகையா, அ.ம.மு.க. சார்பில் சுந்தரராஜ், மக்கள் நீதிமய்யம் சார்பில் காந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் அகல்யா உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 33 ஆயிரத்து 847 பேர் ஆவர். கடந்த 19-ந் தேதி நடந்த இடைத்தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 794 வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சண்முகையா முன்னிலை வகித்து வந்தார்.

மொத்தம் 19 சுற்றுகள் நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா 73,241 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் 53,584 ஓட்டுகள் வாங்கினார். இதனால் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா 19,657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தி, நோட்டோவை விட குறைவான வாக்குகளே பெற்றார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்தையா என்பவர் வெற்றி பெற்றார். அதன்பிறகு இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. தற்போது, 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சண்முகையா வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-

1) சண்முகையா (தி.மு.க.)-73,241,  2) மோகன் (அ.தி.மு.க.)-53,584,  3) சுந்தரராஜ் (அ.ம.மு.க.)-29,228,  4) அகல்யா (நாம் தமிழர் கட்சி)-8666,  5) காந்தி (மக்கள் நீதி மய்யம்)-1734,  6) ராகவன் (சுயே.)-422,  7) சின்னசாமி (சுயே.)-387,  8) ராஜா (இந்திய குடியரசு கட்சி)-306,  9) மள்ளர் மன்னன் (சுயே.)-254,
 10) அக்ரி பரமசிவன் (இளந்தமிழர் முன்னணி கழகம்)-221,  11) உதய செல்வன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)-124,  12) மாரியப்பன் (சுயே.)- 167,  13) பாலகிருஷ்ணன் (சுயே.)-119,  14) எட்டப்பன் (சுயே.)-116,  15) முருகன் (சுயே.)-116,   16) நோட்டா - 1,783

தேர்தலில் வெற்றி பெற்ற சண்முகையாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் வெற்றி சான்றிதழ் வழங்கினார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, தேர்தல் பார்வையாளர் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story