உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரம்பறிப்பு முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது


உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரம்பறிப்பு முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 7:35 PM GMT)

உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என கூறி ஓட்டலில் ரூ.3 ஆயிரத்தை பறித்து சென்ற முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள புலியூர் கேர் காலனியை சேர்ந்தவர் சிவபாண்டியன் (வயது 51). கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊர்க்காவல்படையில் பணியாற்றிய இவர், நடவடிக்கை சரியில்லாததால் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இவர், மதுரை மாவட்டத்தில் செயல்படும் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலில் கரூர் மாவட்ட தலைவராக இருப்பதாக தெரிகிறது.

இந்தநிலையில் சிவபாண்டியனும், அவரது நண்பர் புலியூர் செல்வநகரை சேர்ந்த வேலுசாமியும் (50) நேற்று முன்தினம் மாலை புலியூர் தேசியநெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு காரில் வந்து இறங்கி சாப்பிட சென்றனர். அப்போது அந்த ஓட்டலில் தான் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக மாவட்ட தலைவர் என்றும், தன்னுடன் வந்த வேலுசாமி உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி என்றும் சிவபாண்டியன் அறிமுகப்படுத்தி கொண்டார்.

பின்னர் இருவரும் ஓட்டலில் உள்ள உணவு வகைகளை பார்வையிட்டு அவை தரம் இல்லாமலும், சுத்தம் இல்லாததாகவும் இருக்கிறது, எனவே ஓட்டலுக்கு சீல் வைத்து விடுவோம். இல்லையெனில் அபராதமாக ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். சீல் வைக்காமல் இருக்க வேண்டும் எனில் ரூ.5 ஆயிரம் மட்டும் தாருங்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போது அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என அங்கிருந்த ஓட்டல் வேலையாட்கள் தெரிவித்தனர். பின்னர் ஒருவழியாக ரூ.3 ஆயிரத்தை வேலையாட்களிடம் வாங்கி கொண்டு அங்கிருந்து அந்த 2 பேரும் புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் ஓட்டல் உரிமையாளர் பசுபதிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ஓட்டல் வேலையாட்களை ஏமாற்றி, 2 பேரும் பணம் பறித்ததும், அவர்கள் பயன்படுத்திய கார் போலி எண் கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிவபாண்டியன், வேலுசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்ட மக்களுக்கு இதுபோல் யாரேனும் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவது தெரிய வந்தால், உடனடியாக 93446-13343 என்கிற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தெரிவித்துள்ளார். 

Next Story