பள்ளி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


பள்ளி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 May 2019 11:00 PM GMT (Updated: 28 May 2019 7:33 PM GMT)

பள்ளி விடுதிகளில் சேர மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு என 20 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும், மாணவிகளுக்கு என 9 பள்ளி விடுதிகளும், 1 கல்லூரி விடுதியும் என மொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். விடுதியில் தங்கி பயிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ- மாணவிகளும் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகளும் இதில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ- மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். விடுதியில் சேர மாணவ- மாணவியரது பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

விண்ணப்பம்

இவ்விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய மாணவ- மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத்தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. எனவே, மாணவ- மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

Next Story