ராகுல் காந்தி சொல்வதை கவனிக்க வேண்டும்: பத்திரிகையாளர்களை, குமாரசாமி பகிரங்கமாக மிரட்டுகிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு


ராகுல் காந்தி சொல்வதை கவனிக்க வேண்டும்: பத்திரிகையாளர்களை, குமாரசாமி பகிரங்கமாக மிரட்டுகிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 7:53 PM GMT)

பத்திரிகையாளர்களை குமாரசாமி பகிரங்கமாக மிரட்டுகிறார் என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரு,

உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறி அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டித்து கருத்து தெரிவித்திருந்தார். ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத்தை ராகுல் காந்தி கண்டித்துள்ளார். கர்நாடகத்தில் உங்கள் முதல்-மந்திரி குமாரசாமி, பத்திரிகையாளர்களை பகிரங்கமாக மிரட்டுகிறார், திட்டுகிறார்.

திப்பு சுல்தான் பற்றி பேசிய பத்திரிகையாளர் சந்தோஷ் தம்மையா கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு முதல்-மந்திரியின் மகன் செய்த செயல்கள் பற்றி செய்தி வெளியிட்டற்காக பத்திரிகையாளர் விஸ்வேசுவரபட் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நீங்கள் (ராகுல்காந்தி) மனித இனத்தின் மிக சரியான போலித்தனத்தை போல் காணப்படுகிறீர்கள். குமாரசாமி அண்ணா, பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த உங்களை முட்டாள் என்று ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால் உங்களின் பெயரை குறிப்பிட அவர் பயந்துவிட்டார்.

எங்கு ஆட்சி பறிபோய்விடுமோ என்று கருதி, அவர் உங்களின் பெயரை பதிவிடவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள். இவ்வாறு பா.ஜனதா கூறியுள்ளது.

பா.ஜனதாவின் கருத்துக்கு ஜனதா தளம் (எஸ்) பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அதனால் நீங்களும், உங்களின் ஆதரவாளர்களும் பொய் செய்திகளை பரப்புகிறீர்கள், அதனால் சிறையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.


Next Story