உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை


உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் சிறுவன் கொலை: கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 Jun 2019 10:15 PM GMT (Updated: 11 Jun 2019 8:43 PM GMT)

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்த வழக்கில் கள்ளக்காதல் ஜோடிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கே.கொத்தூரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கலா (வயது 29). இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சங்கர் பெங்களூருவில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கலாவிற்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த புட்டப்பா (45) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1.9.2012 அன்று சங்கரின் தம்பி சதீ‌‌ஷ்குமார் (8), தனது அண்ணன் வீட்டிற்கு சென்றான். அப்போது கலாவும், புட்டப்பாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை சிறுவன் சதீ‌‌ஷ்குமார் நேரில் பார்த்தான். இதனால் தாங்கள் உல்லாசமாக இருந்ததை சிறுவன் சதீ‌‌ஷ்குமார் வெளியில் சொல்லி விடுவானோ? என நினைத்து புட்டப்பாவும், கலாவும் சேர்ந்து சிறுவனை அரிவாளால் தலையில் வெட்டி கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

பின்னர் பிணத்தை ஒரு உரப்பையில் கட்டி அருகில் உள்ள நிலத்தில் போட்டு விட்டு சென்றனர். இந்த கொலை தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி கள்ளக்காதல் ஜோடி புட்டப்பாவையும், கலாவையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ஓசூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட புட்டப்பா மற்றும் கலாவிற்கு பிரிவு 302 கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், பிரிவு 364 (கடத்தல்) கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும், பிரிவு 201 (உடலை மறைத்த குற்றம்) கீழ் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Next Story