மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை வாலிபர் கைது


மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2019 11:00 PM GMT (Updated: 15 Jun 2019 7:44 PM GMT)

மண்ணச்சநல்லூர் அருகே உருட்டுக்கட்டையால் தாக்கி வாகன விற்பனையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உளுந்தங்குடி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் தனபால் (வயது 38). இவர் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் பிரேம்குமார்(21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை கூட ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

தினமும் காலையில் வீட்டு வாசலில் பெண்கள் தண்ணீர் தெளிப்பது தொடர்பாக, 2 வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டின் திண்ணையில் படுத்து தனபால் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மது அருந்திவிட்டு அந்த வழியாக வந்த பிரேம்குமார், உருட்டுக்கட்டையால் தனபாலின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனபால் உயிருக்கு போராடினார்.

இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தனபாலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரேம்குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story