2022-ம் ஆண்டுக்கு பிறகும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை


2022-ம் ஆண்டுக்கு பிறகும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jun 2019 10:45 PM GMT (Updated: 15 Jun 2019 9:20 PM GMT)

2022-ம் ஆண்டுக்கு பிறகும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூரு,

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசும்போது கூறியதாவது:-

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை அமல்படுத்தி உள்ளது. இதன்மூலம் மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி வருவாயை ஈடுகட்ட வருகிற 2022-ம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் மாநில அரசுகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

இந்த ஜி.எஸ்.டி.க்கான இழப்பீட்டு தொகையை 2022-ம் ஆண்டுக்கு பிறகும் மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும். காரணம் என்னவெனில் 2022-ம் ஆண்டுக்கு பிறகு மாநில அரசின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதனால் 2021-22-ம் நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 2022-23-ம் நிதி ஆண்டில் மாநிலத்துக்கான வரி வருவாய் குறையும் என்பது தெளிவாகிறது. இதனால் மாநிலத்தின் உள்கட்டமைப்பு பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இந்த வரி வருவாய் குறைவை ஈடுசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் கூட ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை 2022-ம் ஆண்டுக்கு பிறகும் நீட்டிப்பு செய்ய வேண்டும். இது மாநில அரசுகளுக்கு உதவியாக இருக்கும்.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதால் கர்நாடகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கர்நாடகத்தில் 2019-20-ம் ஆண்டில் கிராம குடிநீர் திட்டத்துக்காக மாநில அரசு ரூ.2,800 கோடி ஒதுக்கிய நிலையில், மத்திய அரசு ரூ.400 கோடி மட்டும் ஒதுக்கி உள்ளது. இதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும்.

‘ராபி’ பருவ பயிர்கள் சேதத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசு ரூ.2,064 கோடி ஒதுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.1,500 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். நிதி ஆயோக்கின் ‘ரேங்க் முறையை வெளிப்படை தன்மையுடனும், தொழில்நுட்ப ரீதியாகவும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story