கோவையில் 3 பேர் கைதான நிலையில் மதுரை வாலிபரை பிடித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை


கோவையில் 3 பேர் கைதான நிலையில் மதுரை வாலிபரை பிடித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை
x
தினத்தந்தி 16 Jun 2019 10:45 PM GMT (Updated: 16 Jun 2019 8:15 PM GMT)

கோவையில் 3 பேர் கைதான நிலையில், மதுரை வாலிபரை பிடித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை,

இலங்கையில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஏராளமானோர் பலியானார்கள். இது சம்பந்தமாக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) கேரளாவில் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் தமிழகத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக கோவையை சேர்ந்த 3 பேர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் 3 பேரும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை பரப்பியுள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மதுரை வந்தனர். அவர்கள் கோவையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள ஒரு வாலிபரிடம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றனர்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரை பிடித்து மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த நபர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரபி பாடசாலையில் படித்து வருவதும், அவர் முகநூல் மூலம் கோவையில் கைதானவர்களிடம் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரது செல்போன் மற்றும் அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் ஆகியவற்றையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த நபரிடம் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வரவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்தனர்.

Next Story