நாமக்கல்லில் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2019 10:45 PM GMT (Updated: 17 Jun 2019 8:52 PM GMT)

மேற்கு வங்க மாநிலத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று நாமக்கல்லில் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாமக்கல்,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய அரசு மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வலியுறுத்தியும் நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் டாக்டர்கள் ஹெல்மெட் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார்.

இதில் செயலாளர் ராஜா, இந்திய பல் மருத்துவமனை சங்க மாவட்ட தலைவர் அருண், இந்திய மருத்துவமனை கூட்டமைப்பு மாவட்ட தலைவர் லீலாதரண் உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசு உடனடியாக மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தம்

ஆனால் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிளீனிக்கள் நேற்று மூடி கிடந்தன. தனியார் ஆஸ்பத்திரிகளை பொறுத்த வரையில் அவசர சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story