குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அரியலூர், பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி அரியலூர், பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 7:01 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர்-அரியலூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடிநீர் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருப்பதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, (ஆலத்தூர் கிழக்கு), அண்ணாதுரை (பெரம்பலூர்), ஜெகதீசன் (வேப்பந்தட்டை கிழக்கு), மதியழகன் (வேப்பூர் வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சியின் மாநில ஆதிதிராவிட நலக்குழுவின் துணை செயலாளர் துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பெரியசாமி, மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர். இதில் கலந்து கொண்ட பெண்கள் காலிக்குடங்களை தலையில் சுமந்து கொண்டு குடம் இங்கே, தண்ணீர் எங்கே? என்று கோஷத்தை எழுப்பினர். முன்னதாக பெரம்பலூர் நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல்பாரூக் நன்றி கூறினார்.

இதே போல் அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். கொள்ளிடம் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க.வினர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், கென்னடி, மாவட்ட அவைத் தலைவர் துரைராஜ், லதா, விஜயலெட்சுமி, நகர செயலாளர் முருகேசன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story