வசாயில் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் செல்போன்கள் கொள்ளை 4 பேருக்கு வலைவீச்சு


வசாயில் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் செல்போன்கள் கொள்ளை  4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jun 2019 10:00 PM GMT (Updated: 25 Jun 2019 8:31 PM GMT)

வசாயில் கடையின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வசாய்,

பால்கர் மாவட்டம் வசாய் மானிக்பூர் நாகாவில் உள்ள ஹனுமான் மந்திர் பகுதியில் பிரபல நிறுவனத்தின் செல்போன் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 4 பேர் வந்தனர். முதலில் அவர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஸ்ப்ரே அடித்தனர். பின்னர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த செல்போன்களை அள்ளிக் கொண்டு தப்பி சென்றனர்.

இந்தநிலையில், காலையில் கடையை திறப்பதற்காக உரிமையாளர் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மானிக்பூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் கடைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் அந்த கொள்ளை கும்பலினர் ரூ.30 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story