வந்தவாசி அருகே, மொபட் மீது கார் மோதல்; தந்தை-மகன் பலி - திண்டிவனத்தை சேர்ந்தவர்கள்


வந்தவாசி அருகே, மொபட் மீது கார் மோதல்; தந்தை-மகன் பலி - திண்டிவனத்தை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 26 Jun 2019 10:30 PM GMT (Updated: 27 Jun 2019 12:37 AM GMT)

வந்தவாசி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் திண்டிவனத்தை சேர்ந்த தந்தை, மகன் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வந்தவாசி, 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 32). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சுவிதா(28), மகன் திவேஷ்(2). இவர்கள் சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்துள்ள தெள்ளாரில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இங்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று முன்தினம் 3 பேரும் மொபட்டில் வடசிறுவள்ளூர் கிராமத்திற்கு புறப்பட்டனர்.

வந்தவாசி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் தெள்ளார் அருகே உள்ள கொடியாலம் கிராமம் அருகே சென்றபோது திண்டிவனத்தில் இருந்து செய்யாறு நோக்கிச் சென்ற கார் இவர்களது மொபட் மீது மோதியது. இதில் கங்காதரன், சுவிதா, திவேஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கங்காதரன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். படுகாயம் அடைந்த சுவிதா, திவேஷ் ஆகியோர் வந்தவாசி அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைக்காக திவேஷ் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கும், சுவிதா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு திவேஷ் பரிதாபமாக இறந்தான். சுவிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே தெள்ளார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த கங்காதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான செய்யாறு தாலுகா கொற்கையை சேர்ந்த சீனிவாசன் (35) என்பவரை கைது செய்தனர்.

Next Story