தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் உத்தரவு


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு  கண்காணிப்பு அலுவலர் உத்தரவு
x
தினத்தந்தி 27 Jun 2019 10:15 PM GMT (Updated: 27 Jun 2019 6:43 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த், நேரில் சென்று ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பாத்திமாநகர், டெலிபோன் காலனி, லய்ன்ஸ்டோன், ரோச் காலனி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தபால்தந்தி காலனி, பாரதிநகர், ராஜகோபாலன்நகர், கதிர்வேல்நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பாரதிநகர் நீர்தேக்க தொட்டியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் பார்வையிட்டார்.

அதே போல் முத்துநகர், முள்ளகாடு, முத்தையாபுரம், வேலாயுதபுரம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் பிரித்து அனுப்பும் வல்லநாட்டில் இருந்து குடிநீர் வரும் மெயின் பைப்பினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, வல்லநாடு அருகே உள்ள கலியாவூரில் உள்ள நீரேற்று நிலையத்தினையும் பார்வையிட்டார். குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை சீராகவும், விரைவாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வீ.பி.ஜெயசீலன், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி ஆணையர் பிரின்ஸ், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகள் பிரபாகரன், லோகநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story