மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்


மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 7:16 PM GMT)

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.24 லட்சம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செம்பட்டு,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கம், மின்னணு சாதனங்கள் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்து, கடத்தி வரப்படும் பொருட்களை பறிமுதல் செய்வார்கள்.

இந்த நிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு மலிண்டோ விமானம் திருச்சிக்கு வந்தது. இதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த அஜ்மல்கான் என்ற பயணி 20-க்கும் மேற்பட்ட வெள்ளை நிற வெளிநாட்டு கைக்கெடிகாரங்களை கொண்டு வந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த கைக்கெடிகாரங்களை பிரித்து ஆய்வு செய்தனர். அப்போது, தங்கத்தகடுகள் மீது குரோமிய முலாம் பூசி, அவற்றை கைக்கெடிகாரங்களின் உள்ளே மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கைக்கெடிகாரங்களையும், அதில் நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 690 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். மேலும் இதுபற்றி அஜ்மல்கானிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story