வழித்தடத்தை நீட்டித்து 2 அரசு பஸ்கள் இயக்கம் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்


வழித்தடத்தை நீட்டித்து 2 அரசு பஸ்கள் இயக்கம் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 24 July 2019 10:30 PM GMT (Updated: 24 July 2019 7:53 PM GMT)

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து புளியங்குறிச்சி வரை அரசு டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

வேப்பந்தட்டை,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து புளியங்குறிச்சி வரை அரசு டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களை பெரம்பலூர் மாவட்டம் அய்யனார்பாளையம் மற்றும் கை.களத்தூர் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை வழித்தடத்தை நீட்டித்து, அதாவது ஆத்தூரிலிருந்து புளியங்குறிச்சி வரை இயக்கப்பட்டு வரும் டவுன் பஸ்சை பெரம்பலூர் மாவட்டம் அய்யனார்பாளையம் வரையும், புறநகர் பஸ்சை அய்யனார்பாளையம் வழியாக கை.களத்தூர் வரையும் நீட்டித்து இயக்க உத்தரவிட்டது. இதனையடுத்து நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பஸ் போக்கு வரத்தின் தொடக்க விழா அய்யனார்பாளையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் தொகுதி தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., தலைவாசல் தொகுதி மருதமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ் ஆகியவற்றை இயக்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் சேலம் போக்குவரத்து கோட்ட மேலாளர் காங்கேயன், வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், கிளை மேலாளர்கள் ஆத்தூர் பாண்டியன், தம்மம்பட்டி ராஜா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் சிவா அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கியதால் அய்யனார்பாளையம் மற்றும் கை.களத்தூர் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story