கல்பாக்கம் அருகே லாரி டயர்கள் திருட்டு; 4 பேர் கைது


கல்பாக்கம் அருகே லாரி டயர்கள் திருட்டு; 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2019 9:53 PM GMT (Updated: 1 Aug 2019 9:53 PM GMT)

கல்பாக்கம் அருகே லாரி டயர்கள் திருடியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். லாரி உரிமையாளரான இவர் தனது லாரிகளுக்காக புதுச்சேரியில் இருந்து டியுப்களுடன் கூடிய 22 புதிய டயர்களை ரூ.3 லட்சத்து 34 ஆயிரம் செலவில் வாங்கி வந்துள்ளார். அவற்றை தனது வீட்டின் அருகிலுள்ள ஷெட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

கடந்த மாதம் 25-ந் தேதி தனது லாரிகளுக்கு புதிய டயர் பொருத்துவதற்காக அவர் ஷெட்டை திறந்து பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த டயர்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் லாரி உரிமையாளர் பச்சையப்பனிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த மாமல்லபுரத்தை அடுத்த குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (36) மற்றும் அவரது நண்பர்களான முள்ளிக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37), திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மாணிக்கம் (47), செங்கல்பட்டை சேர்ந்த பூபாலன் (52), நெல்வாய் கிராமம் சத்யா என்ற சத்யராஜ் (36), நடுவக்கரை கிராமத்தை சேர்ந்த அருள் (25), இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (40) ஆகியோர் சேர்ந்து 22 டயர்களை திருடியது தெரிய வந்தது.

இவர்களில் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன், மாணிக்கம் மற்றும் பூபாலன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து டயர்கள் மீட்கப்பட்டது.

Next Story