காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றாலும் திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்


காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றாலும் திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:45 PM GMT (Updated: 3 Aug 2019 5:30 PM GMT)

காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றாலும் திருச்சியில் ஆடிப்பெருக்கு விழாவை திரளானோர் உற்சாகமாக கொண்டாடினர். புதுமண தம்பதிகள் புனித நீராடினர், படித்துறை, மணற்பரப்பில் பெண்கள் வழிபாடு நடத்தினர்.

திருச்சி,

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் காவிரி கரையோரங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரியானது தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெறும். பக்தர்கள் சாரை, சாரையாக வந்து படித்துறையில் வழிபாடு நடத்துவார்கள்.

கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் இரு புறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடியது. அதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வழிபாடு நடத்தினர். ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரை கண்டு பூரிப்படைந்தனர். அப்போது தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத நிலையிலும் காவிரி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது.

இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்கிறது. இதனால் காவிரி ஆறு மணற்பரப்பாக காட்சி யளிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாததாலும், வருணபகவானின் கருணை இல்லாததாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் இல்லாமல் ஓடை போல செல்கிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் தான் சிறிதளவு ஓடுகிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் அகண்ட காவிரியில் ஆற்றின் நடுப்பகுதியில் தண்ணீர் ஓடைபோல் செல்வதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா களைகட்டுமா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பக்தர்கள் வழக்கம் போல ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு நேற்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகமானது. ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே சென்றாலும் வழக்கமான தங்களது பாரம்பரிய விழாவை கொண்டாட திருச்சி மட்டுமில்லாமல் அரியலூர், பெரம்பலூர் உள்பட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் உற்சாகமாக வந்திருந்தனர்.

ஆற்றில் நடுப்பகுதியில் தண்ணீர் ஓடியதால் பக்தர்கள் பெரும்பாலானோர் மணற்பரப்பில் நடந்து சென்றனர். அங்கு புனித நீராடி வழிபாடு நடத்தினர். பலர் வீட்டிலேயே குளித்துவிட்டு வந்திருந்ததால் காவிரி ஆற்றின் தண்ணீரில் கை, கால்களை நனைத்த பின், தண்ணீரை கையில் எடுத்து தலையில் 3 முறை தெளித்து கொண்டனர்.

புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடினர். இந்துக்களில் பெரும்பாலானோர் திருமணத்தன்று மணமக்கள் அணியும் திருமண மாலைகள் வீட்டில் பத்திரமாக வைத்திருப்பது உண்டு. அதனை ஆடிப்பெருக்கு விழா அன்று காவிரி ஆற்றில் விடுவது வழக்கம். இந்த வழக்கப்படி சமீபத்தில் திருமணமான தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டனர்.

அம்மா மண்டபம் படித்துறை மற்றும் மணற்பரப்பில் பக்தர்கள் வாழை இலை விரித்து படையலிட்டனர். அதில் மஞ்சள் பிள்ளையார், மஞ்சள் தடவிய தேங்காய், பழம், வெல்லம், ஏலக்காய் கலந்த அரிசி, கரும்பு துண்டு, கொய்யா, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் உள்ளிட்ட பழ வகைகளை வைத்தும், மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி உள்பட மங்கல பொருட்களை வைத்தும், மஞ்சள் கயிறுகளையும் வைத்திருந்தனர். வீட்டில் மூத்த சுமங்கலி பெண்கள் அந்த படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். அப்போது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பய, பக்தியுடன் வழிபாடு நடத்தினர். தீபாராதனையை படையலுக்கு காண்பித்த பின் ஆற்றை நோக்கி காவிரித்தாய்க்கும், சூரிய பகவானுக்கும் காண்பித்தனர். அப்போது தங்களது வாழ்வில் எல்லா வளமும், செல்வமும் பெருகவும், தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், விவசாயம் செழிக்கவும், ஆற்றில் தற்போது தண்ணீர் அதிகம் இல்லாவிட்டாலும் வருகிற ஆண்டிலாவது தண்ணீர் இருபுறமும் கரையை தொட்ட படி பாய்ந்து ஓட வேண்டும் என பக்தர்கள் வேண்டியதை காணமுடிந்தது. பூஜை முடிந்ததும் கற்பூர தீபத்தை குடும்ப உறுப்பினர்கள் தொட்டு வணங்கினர்.

பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களுக்கு கழுத்திலும், இளைஞர்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். இதேபோல அருகில் பூஜை செய்த மற்ற சுமங்கலி பெண்களுக்கும் மஞ்சள் கயிறு கட்டினர். மேலும் சுமங்கலி பெண்கள் தங்களது மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் தாலி சரடுகளை மாற்றி கட்டி வீட்டில் மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர்.

இதேபோல சுமங்கலி பெண்களும் தாலிக்கயிறு மாற்றி புதிய கயிறு கட்டிக்கொண்டனர். வழிபாடு நடத்திய பின் படையலில் இருந்த அரிசியை எடுத்து குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், அங்கிருந்த பக்தர்களுக்கும் வினியோகித்தனர். மேலும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் அடங்கிய பொட்டலங்களை வழங்கினர்.

வழிபாடு நடத்திய பின் படையலில் இருந்தவற்றில் சிலவற்றை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு 2 பழம், பத்தி, மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தும், அதில் காணிக்கையாக காசு மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்தும் ஆற்றில் விட்டனர். ஆற்றில் தண்ணீர் ஓட்டம் இல்லாததால் வாழை இலைகள், தட்டுகள் அதன் அருகிலேயே தேங்கி கிடந்தன. மேலும் ஆற்றில் விடப்பட்ட மாலைகளும் குவிந்து கிடந்தன. இதனை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி கரையில் வைத்தனர்.

மணற்பரப்பில் வழிபாடு நடத்தியவர்கள் பலர் மண்ணை கைப்பிடியாக பிடித்து அதற்கு பூக்கள் வைத்து பூஜை நடத்தியதையும் காணமுடிந்தது. மணற்பரப்பில் வாழை இலை விரித்து பூஜை நடத்த பக்தர்களுக்கு வசதியாக இருந்தது. இதனால் நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை. ஆங்காங்கே தனித்தனியாகவும், சில இடங்களில் வரிசையாகவும் வைத்தும் வழிபாடு நடத்தினர். இதனால் காவிரி ஆற்றில் நடுப்பகுதியில் பக்தர்கள் தலையாக தென்பட்டது.

அம்மாமண்டபம் படித்துறையில் பக்தர்கள் புனித நீராட ஒரு தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் குழாய்களில் குளிப்பதற்காக “ஷவர்” வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அம்மா மண்டபம் படித்துறையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் குற்றசம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். ஸ்ரீரங்கம் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் பகல் 1 மணிக்கு மேல் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. மதியத்திற்கு பின் மாலையில் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து காவிரி ஆற்றில் வழிபாடு நடத்தினர்.

இதேபோல கருடமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, கீதாபுரம் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். தண்ணீர் அதிகம் இல்லாமல் காவிரி ஆறு வறண்டு கிடந்தாலும் மணற்பரப்பில் ஆடிப் பெருக்கு விழாவை திருச்சியில் பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

Next Story