சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார்


சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,450 போலீசார்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:15 PM GMT (Updated: 9 Aug 2019 6:00 PM GMT)

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமான நிலையம், ரெயில் நிலையம், முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 5-ந் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன் எதிரொலியாக வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்காக வந்த 1,600 மத்திய துணை ராணுவப்படையினர் வேலூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இப்பணியில் வருகிற 31-ந் தேதி வரை ஈடுபட உள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலசுப்பிரமணியன், விஜயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு வருகை தரும் வேலூர் கோட்டை, வழிபாட்டு தலங்களில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடைமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்யப்பட உள்ளன. இந்த பணிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபடுவார்கள்.

மாநில எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், ரோந்து பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story