தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கட்டுரை-பேச்சு போட்டிகள்; மாணவ-மாணவிகள் பங்கேற்பு


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கட்டுரை-பேச்சு போட்டிகள்; மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 11:00 PM GMT (Updated: 9 Aug 2019 8:42 PM GMT)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கரூரில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

கரூர், 

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே தமிழ் ஆர்வத்தினை மேம்படுத்தும் பொருட்டு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நேற்று கரூர் தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாரியம்மாள் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அன்புசெழியன் முன்னிலை வகித்தார். மூத்த தமி ழறிஞர் கருவை வேணு வாழ்த்தி பேசினார். இதில் “பரவட்டும் பாவேந்தம்” என்கிற தலைப்பில் கவிதை போட்டியும், தொல் நாகரிகம் மற்றும் தமிழர் நாகரிகம் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு தான் மாணவர்களுக்கு அதற்குரிய தலைப்புகள் வழங்கப் பட்டன.

மேலும் தமிழின் இனிமை, தன்மானம், இயற்கை, புதிய உலகு செய்வோம் என்கிற தலைப்புகளில் மாணவர்கள் பேசி தங்களது பேச்சு திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் கலை-அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என 9 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் மதுப்பிரியா, கிருஷ்ணவேணி, மகேஸ்வரி, சுரேஷ், முகம்மது யூனுஸ், சுகன்யா, சகாதேவன், ஸ்டாலின், கவுதமன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story