காரிமங்கலம் அருகே துணிகரம், அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 48 பவுன் நகை கொள்ளை


காரிமங்கலம் அருகே துணிகரம், அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 48 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 7:33 PM GMT)

காரிமங்கலம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம் மற்றும் 48 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியமிட்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 45). அரிசி ஆலை உரிமையாளர். மேலும் இவர் நெல் வியாபாரமும் செய்து வருகிறார். இவருடைய மனைவி லதா (35). இவர்களுக்கு பரத், ஸ்ரீராம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று லதா தனது தாயாரை கோவையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டார். ராமன் அரிசி ஆலைக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் சிறுவன் ஸ்ரீராம் நேற்று பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தான். அப்போது வீட்டின் முன்பக்க கேட் திறந்தும், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்தும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் இதுகுறித்து தனது தந்தை ராமனுக்கு தகவல் தெரிவித்தான். அதன்பேரில் அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த ரூ.15 லட்சம் மற்றும் 48 பவுன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து ராமன் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தர்மபுரியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோவில் இருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி விட்டு மீண்டும் திரும்பி விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story