சுதந்திரதினத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு படையினர் சோதனை


சுதந்திரதினத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு படையினர் சோதனை
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 7:16 PM GMT)

தஞ்சையில், சுதந்திரதினத்தையொட்டி ரெயில்களில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற் கொண்டனர்.

தஞ்சாவூர்,

சுதந்திரதின விழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவில்கள், ரெயில் நிலையங்கள், ரெயில்கள், பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்தினர். தஞ்சை பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகத்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி நேற்று அனுமதிக்கப்பட்டதோடு, பக்தர்கள் கொண்டுவரும் உடைமைகளும் பலத்த சோதனை செய்யப்பட்டது.

தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் கொண்டு வந்த உடமைகளை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். மேலும் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் ஏறி பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

தண்டவாளங்கள்

அதேபோல் தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் சென்ற பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் களின் பெட்டிகளில் ஏறி போலீசார் சோதனை செய்தனர். தஞ்சை ரெயில் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தண்டவாளங்களையும் நவீன கருவி மூலம் போலீசார் சோதனையிட்டனர். ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் மர்ம பார்சல்கள் அல்லது பொருட்கள் ஏதாவது கிடந்தால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என பயணிகளிடம் போலீசார் தெரிவித்தனர். அதேபோல பெரிய பாலங்களுக்கும், தேச தலைவர்களின் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story