நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை


நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Aug 2019 10:15 PM GMT (Updated: 17 Aug 2019 8:50 PM GMT)

நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

சென்னை கூடுவாஞ்சேரி மாணிக்கபுரத்தை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவருக்கும், நாகர்கோவில் அருகே ஆளூர் வீராணியை சேர்ந்த திவ்யா என்ற கோகிலா (வயது 26) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் திவ்யா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பிரசவத்துக்காக வீராணியில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்தார். திவ்யாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி வந்தது. இதனையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சாவு

ஆனால் பிரசவத்துக்கு பின்னர் திவ்யாவுக்கு ரத்த போக்கு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்துக் காக அனுமதிக்கப்பட்ட திவ்யா திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story