திருச்சி விமான நிலையத்தில் ரூ.20¾ லட்சம் கடத்தல் தங்க சங்கிலிகள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.20¾ லட்சம் கடத்தல் தங்க சங்கிலிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 7:02 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் கடத்தல் தங்க சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கிருந்தும் விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன. இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சிலர் தங்கம், மின்னணு பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவற்றை கடத்தி வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாக இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் பல பயணிகளிடம் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் மலிண்டோ விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரோஸிஆனா அருணாச்சலம் (வயது 39) என்ற பயணி தனது உடலில் சங்கிலி வடிவில் 326 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது. தெரியவந்தது.

இதுபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருநாவுக்கரசு என்ற பயணி 230 கிராம் தங்கத்தை சங்கிலி வடிவில் தனது உடலில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்க சங்கிலிகளின் மொத்த மதிப்பு ரூ.20¾ லட்சம் ஆகும்.


Next Story