கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்


கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 22 Aug 2019 10:45 PM GMT (Updated: 22 Aug 2019 7:11 PM GMT)

கும்பகோணம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணம்,

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கும்பகோணம் தனிமாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கும்பகோணத்தில் கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூட்டு நடவடிக்கை குழு தலைவரும், அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவருமான சோழா.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.அன்பழகன், கோ.வி.செழியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கோரிக்கை நிறைவேற...

கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் லோகநாதன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், த.மா.கா. மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், பா.ஜனதா நகர தலைவர் சோழராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் விமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வக்கீல்கள் சங்க செயலாளர் தரணிதரன் நன்றி கூறினார்.


Next Story