புதிய கொள்கை என்பது கல்வியை மத்திய அரசு பட்டியலுக்கு எடுத்து செல்லும் முயற்சி - நாராயணசாமி குற்றச்சாட்டு


புதிய கொள்கை என்பது கல்வியை மத்திய அரசு பட்டியலுக்கு எடுத்து செல்லும் முயற்சி - நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Aug 2019 12:00 AM GMT (Updated: 24 Aug 2019 7:39 PM GMT)

புதிய கல்விக்கொள்கை என்பது பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மத்திய அரசு பட்டியலுக்கு எடுத்து செல்லும் முயற்சி என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான பரப்புரை இயக்கத்தின் சார்பில் தேசிய கல்வி கொள்கை வரைவு-2019 ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் கல்வி உரிமை மீட்பு மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு முருகானந்தம் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்தியா பல மொழிகள், மதங்கள், கலாசாரம் கொண்டது. எனவே ஒரே மதத்தை முன்வைத்து கல்விக்கொள்கை இருக்கக்கூடாது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்துவிட்டது. சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுபோன்ற தேர்வு தேவையா? வடமாநிலங்களுக்கு ஏற்றாற்போல் தென் மாநிலங்களை அழிக்கின்றனர்.

இப்போது மருத்துவராக பணியாற்ற படித்தால் மட்டும் போதாது ஒரு தகுதி தேர்வும் எழுதவேண்டுமாம். நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளார்கள். பல்கலைக்கழகங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் கொடுக்கப்பட்ட நிதியில் தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் யாரும் இங்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கலாம். இதனால் கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியன ஒழிந்துபோகும். கண்டிப்பாக இந்தி படிக்க வேண்டுமாம். புதுவையில் கவர்னர் எதற்கும் முட்டுக்கட்டை போடுகிறார். பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோப்பு அனுப்பினால் மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்புகிறார். அதன் மூலம் வந்தாலும் சில மாதங்கள் பணி புரிந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு மாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்.

நீதிமன்றத்துக்கு சென்று புதுவை மக்களுக்கான உரிமையை நிலைநாட்டியுள்ளோம். ஜூன் மாதம் அனுப்பிய பட்ஜெட்டுக்கு இப்போதுதான் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. புதிய கல்விக்கொள்கை என்பது கல்வி உரிமையை பொதுப்பட்டியலில் இருந்து மத்திய அரசு பட்டியலுக்கு எடுத்து செல்லும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளோம். இதுதொடர்பாக பெரிய மாநிலங்கள் முதல்-அமைச்சர்கள் மாநாட்டை கூட்டினால் நானும் சென்று பங்கேற்பேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தபின் தமிழர்களுக்கு எதிரான நிலையை கையில் எடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் தேசிய கல்விக்கொள்கை. தமிழக எம்.பி.க்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தி.மு.க. சார்பில் கல்வியாளர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து இந்த கல்விக் கொள்கை வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல் புதுச்சேரி மக்களின் ஒட்டுமொத்த குரலாக புதுவை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழர்களின் குரலாக முதல்-அமைச்சரின் குரல் ஒலிக்கவேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story