நர்சு தீக்குளித்து தற்கொலை - உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்


நர்சு தீக்குளித்து தற்கொலை - உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sep 2019 10:30 PM GMT (Updated: 7 Sep 2019 9:00 PM GMT)

திருமணமான ஒரு ஆண்டில் நர்சு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

உப்பிலியபுரம்,

துறையூர் அருகே உள்ள சிட்லரையை சேர்ந்த கணேசனின் மகள் கவுசல்யா(வயது 20). நர்சிங் முடித்துள்ள இவர் துறையூர் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிபாளையத்தை சேர்ந்த நடராஜின் மகன் ஆனந்த்(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

டிப்ளமோ படித்துள்ள ஆனந்த் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாமியார் வீட்டில் இருந்த கவுசல்யா நேற்று முன்தினம் காலை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் இருந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

கவுசல்யா இறந்தது பற்றி தகவல் அறிந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் கவுசல்யாவின் உடலை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் கவுசல்யாவின் உடலை வாங்க மறுத்தனர்.

அத்துடன், தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், கவுசல்யாவை அவருடைய மாமனார், மாமியார் கொடுமை படுத்தியதாகவும், தங்கள் மகள் எரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறிபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த முசிறி ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், தாசில்தார் சத்யநாராயணன், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் கவுசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கவுசல்யாவின் உடலை வாங்கிச்சென்றனர். இதுகுறித்து கவுசல்யாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மர்ம சாவு என்று உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் கவுசல்யாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் முசிறி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story