கடலூர், கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்


கடலூர், கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:15 PM GMT (Updated: 17 Sep 2019 12:49 PM GMT)

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

அனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்பவர்கள், சிறு வணிகம் செய்வோர், சாகுபடி செய்பவர்களுக்கு அந்தந்த இடங்களை கிரயம் செய்து தரக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கற்பனைசெல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனி, அமுல்ராஜ், கமலக்கண்ணன், ராஜாராமன், செங்குட்டுவன், செல்வமணி, முருகன், அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாயிகள் சங்க பொருளாளர் பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து அவர்கள் அனைத்து சமய நிறுவன இடங்களில் குடியிருப்போருக்கு, அந்த இடங்களுக்கான நியாயமான விலையை தீர்மானித்து பயனாளிகளிடம் இருந்து கிரயத்தொகையை தவணை முறையில் பெற்றுக்கொண்டு இடங்களை சொந்தமாக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர்கள் தட்சிணாமூர்த்தி, சரவணன், துணை தலைவர் சதானந்தம், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி மற்றும் அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் கலந்து கொண்டனர்.

Next Story