சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போர்வையில் இளம்பெண்களை வைத்து விபசாரம்


சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போர்வையில் இளம்பெண்களை வைத்து விபசாரம்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:15 PM GMT (Updated: 19 Sep 2019 10:27 PM GMT)

சேலம் பெரமனூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து கணவன்-மனைவி போர்வையில் விபசார தொழிலில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் பெரமனூர் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த இடத்தில் ஒரு கும்பல் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அஸ்தம்பட்டி போலீசார் நேற்று மதியம் பெரமனூர் மேயர்நகர் பகுதியில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் சென்று அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வீட்டிற்குள் சில இளம்பெண்கள் இருந்ததும், அவர்களை புரோக்கர் ஒருவர் விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சுதா (வயது 32) என்பவர், தனது நண்பரான வாழப்பாடியை சேர்ந்த குமாருடன் (32) சேர்ந்து இந்த விபசார தொழிலை நடத்தி வந்தது தெரியவந்தது. அதாவது, இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்று கூறி சேலம் மேயர் நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீடு வாடகை எடுத்து, விபசார தொழில் நடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து புரோக்கர்களாக செயல்பட்ட சுதா, அவரது நண்பர் குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதில், கைது செய்யப்பட்ட சுதா என்பவர் மீது ஏற்கனவே அஸ்தம்பட்டி, அழகாபுரம் பகுதிகளில் விபசார தொழிலில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆத்தூரை சேர்ந்த விபசார புரோக்கரான சுதா, தனது ஊரில் ஏழ்மை நிலையில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை சேலத்திற்கு வரவழைத்து விபசார தொழிலை நடத்தி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீட்கப்பட்ட இளம் பெண்களில் கல்லூரி மாணவிகள் இருக்கிறார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பெரமனூரில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்திய பெண் உள்பட 2 பேர் போலீசில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story