ஒகேனக்கல்லுக்கு பெற்றோருடன் சுற்றுலா வந்த நாமக்கல் மாணவி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்


ஒகேனக்கல்லுக்கு பெற்றோருடன் சுற்றுலா வந்த நாமக்கல் மாணவி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 9:20 PM GMT)

பெற்றோருடன் சுற்றுலா வந்த நாமக்கல் மாணவி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

பென்னாகரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிலிப்பாக்குட்டை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மகள் இந்துஜா(வயது12). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மகாதேவன் தனது குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் ஊட்டமலை பரிசல் துறையில் குளித்து கொண்டு இருந்தார்.

அப்போது மாணவி இந்துஜா திடீரென காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாதேவன் மகளை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் சிறுமியை தண்ணீர் அடித்து சென்றது. இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கும், தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தினர் சோகம்

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதையடுத்து பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணியை முடுக்கி விட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் சிறுமியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பெற்றோர் கண் எதிரே சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் சோகத்துடன் காணப்பட்டனர். சுற்றுலா வந்த பள்ளி மாணவி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story