கொரடாச்சேரியில் ஆந்திர மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு


கொரடாச்சேரியில் ஆந்திர மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Oct 2019 10:15 PM GMT (Updated: 8 Oct 2019 6:52 PM GMT)

கொரடாச்சேரியில் ஆந்திர மாநில கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

திருவாரூரில் உள்ள ஒரு டீக்கடையில் 8 பேர் கொண்ட கும்பல் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் சந்தேகப்பட்டு அந்த கும்பலை சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் அக்பர்(35) என்பதும், ஆந்திர மாநிலம் குண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பதும், இவருடன் வந்த மற்ற 7 பேரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. போலீசார் அக்பரிடம் விசாரிப்பதை பார்த்த மற்றவர்கள் அனைவரும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனைத்தொடர்ந்து அக்பரை கைது செய்த போலீசார், தப்பியோடியவர்களை பிடிக்க மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

காரில் வந்தனர்

இந்த தகவலின் பேரில் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூரில் இருந்து வேகமாக வந்த ஒரு சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஆந்திர மாநில கொள்ளை கும்பலை சேர்ந்த பகரலி(வயது 50), ‌ஷா‌ஷாகாவாத்(48), சேக்உசேன்பா‌ஷா(29) என்பது தெரிய வந்தது.

4 பேர் கைது

இதனைத்தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் கைது செய்த கொரடாச்சேரி போலீசார், அவர்கள் வந்த கார் மற்றும் அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருவாரூர் சிறப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேருவிடம் ஒப்படைத்தனர்.

கைதான அக்பர் உள்பட 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 4 பேர் தப்பியோட்டம்

கொள்ளையர்களான இவர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு உதவுவது போலவும் அல்லது அவர்களது கவனத்தை திசை திருப்பியும் கொள்ளையடிப்பவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

இவர்கள் கும்பலாக ஏன் திருவாரூர் பகுதியில் முகாமிட்டார்கள்? வேறு எங்கும் கொள்ளையடிக்க திட்டமிட்டு இங்கு வந்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மற்ற 4 பேரையும் திருவாரூர் சிறப்பு படை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story