அம்பாத்துரையில் பொதுமக்கள் 3 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டம்


அம்பாத்துரையில் பொதுமக்கள் 3 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2019 10:45 PM GMT (Updated: 8 Oct 2019 9:56 PM GMT)

அம்பாத்துரையில் பொதுமக்கள் 3 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். ஆங்காங்கே நடுவழியில் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

சின்னாளபட்டி, 

திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில் தண்டவாளத்தில் 11-வது கிலோ மீட்டரில் அம்பாத்துரை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு கிழக்கே சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, அண்ணாநகர், இந்திரா நகர், எர்நாகம்பட்டி ஆகிய கிராமங்களும், விவசாய நிலங்களும் உள்ளன. இந்த கிராமமக்கள் மற்றும் விவசாயிகளுக்காக அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது.

இந்த ரெயில்வே கேட் எப்போதும் பூட்டியே கிடக்கும். பகல் நேரங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 4 முறை இந்த கேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள பணியாளர் ஒருவர் வந்து சிறிது நேரம் திறந்துவைத்து விட்டு மீண்டும் உடனே அடைத்து விட்டு சென்றுவிடுவார். மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை எப்போதும் பூட்டியே இருக்கும். இதனால் பொது மக்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் இந்த ரெயில்வே கேட்டுக்கு நிரந்தரமாக ‘கேட் கீப்பரை’ நியமிக்க வேண்டும் என கோரி 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

எனவே இந்த பகுதி பொதுமக்கள் கேட் அருகே இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு பாதை அமைத்து அதை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். இதனை பார்த்த ரெயில்வேநிர்வாகம், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை ஆபத்தானது என கூறி அந்த பாதையை அடைத்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் 2.30 மணியளவில் அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே கூடினர். பின்பு அவர்கள் நிரந்தரமாக ரெயில்வே ‘கேட் கீப்பர்’ நியமனம் செய்ய வேண்டும், ரெயில்கள் வராத நேரத்தில் கேட்டை திறந்து வைக்க வேண்டும் என கூறி தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அம்பாத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மற்றும் அம்பாத்துரை ரெயில் நிலைய அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் ‘கேட் கீப்பர்’ நியமனம் செய்யப்படுவார் என்று வாக்குறுதி கொடுத்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக தெரிவித்தனர்.

அப்போது மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலை மறிக்க பொதுமக்கள் முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து தேஜஸ் ரெயில் மெதுவாக அந்த இடத்தை கடந்து திண்டுக்கல் நோக்கி சென்றது.

இதன் பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் திறக்கப்பட்ட கேட்டை மீண்டும் மூடினால் மட்டுமே சிக்னல் கிடைத்து ரெயில்கள் அந்த இடத்தை கடந்து செல்லும் என கூறி, கேட்டை அடைக்க விடாமல் அங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்தினர். மேலும் பொதுமக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

மாலை 4.10 மணியளவில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது கேட்டை ஊழியர்கள் அடைக்க முயன்றனர். ஆனால் கேட்டை அடைக்க முடியாத அளவிற்கு பொது மக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி இருந்ததால் கேட்டை அடைக்க முடியவில்லை.

இதனால் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் அம்பாத்துரை அருகே நடு வழியில் நிறுத்தப்பட்டது. அதே போல் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் வெள்ளோடு அருகேயும், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ரெயில் கொடைரோடு அருகேயும் நடு வழியில் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ரெயில்வே துறை சார்பில் உடனடியாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ‘கேட் கேப்பர்’ நியமிக்கப்படுவார் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாலை 5½ மணியளவில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் பின்னர் கேட் மூடப்பட்டு ஆங்காங்கே நடு வழியில் நின்ற ரெயில்கள் ஒவ்வொன்றாக அம்பாத்துரையை கடந்து சென்றது.இதனால் ரெயில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். பொதுமக்களின் 3 மணி நேர போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

Next Story