நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை


நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 13 Oct 2019 11:15 PM GMT (Updated: 13 Oct 2019 10:01 PM GMT)

நாமக்கல் தனியார் பள்ளி மற்றும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதில் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி நிர்வாகம் சார்பில் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாமக்கல், கரூர், பெருந்துறை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அது தொடர்பான கணக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படுவது இல்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து கடந்த 11-ந் தேதி நாமக்கல்லில் உள்ள பள்ளி அலுவலகம், பள்ளி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் ‘நீட்’ பயிற்சி மையங்கள் உள்ளிட்ட 17 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது ‘நீட்’ தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு முறையான ரசீது வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

ரூ.150 கோடி

2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் வங்கி லாக்கர் மற்றும் பள்ளியின் கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.30 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 3-வது நாளாக நீடித்தது. மேலும் இந்த குழுமம் சுமார் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில், இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் எவ்வளவு? வரி ஏய்ப்பு எவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது? என்பது தொடர்பான துல்லியமான விவரம் டெல்லியில் இருந்து வெளியிடப்படும் என சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story