வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை


வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 15 Oct 2019 11:15 PM GMT (Updated: 15 Oct 2019 5:40 PM GMT)

புதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வைத்தூர் மற்றும் தொழுதாம்பட்டி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கீழமுத்துக்காடு பகுதியில் உள்ள வயலுக்கு கடலை எடுக்க நேற்று சென்றனர். அவர்கள் வயலில் கடலை எடுத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

இதேபோல கீழமுத்துக்காடு பகுதியிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பெண்கள் வயலில் கடலை எடுத்து கொண்டிருந்த பகுதியில் பயங்கர இடிச்சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், வைத்தூரை சேர்ந்த எத்திராஜ் மனைவி சாந்தி (வயது 35), தொழுதாம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி விஜயா (47) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் கடலை எடுத்து கொண்டிருந்த 27 பெண்கள் படுகாயமடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் படுகாயமடைந்த 27 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வைத்தூரை சேர்ந்த லெட்சுமணன் மனைவி லெட்சுமியம்மாள் (65), ராஜேந்திரன் மனைவி கலைச்செல்வி (45) ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர்.

வைத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி சின்னாத்தாள், சன்னாசி மனைவி நாகலட்சுமி (50), நாகுல் மனைவி சரோஜா (60), முருகன் மனைவி ஜெயலட்சுமி (32), சன்னாசி மனைவி ரெங்கம்மாள் (50), ராமசாமி மனைவி தமிழரசி (50), அய்யப்பன் மனைவி வளர்மதி (40), பெருமாள் மனைவி கோவிந்தம்மாள் (50), இருளப்பன் மனைவி ஜெயராணி (40), ராமன் மனைவி மலர் (35), ராஜூ மனைவி மீனாள் (35), சூர்யமூர்த்தி மனைவி பூமணி (40), ரெங்கசாமி மனைவி காவேரி (55), குள்ளன் மனைவி சரோஜா (50), சிவராமன் மனைவி அழகுலட்சுமி, செல்லபாண்டி மனைவி சித்ரா (30), பிச்சை மனைவி லட்சுமி (50), சந்திரன் மனைவி ராசம்மாள் உள்பட 25 பேர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்தும் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கதறி அழுதனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் அழுகை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் இறந்த 4 பேரின் உடலைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பிரேத கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story