தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு


தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 26 Oct 2019 10:15 PM GMT (Updated: 26 Oct 2019 8:59 PM GMT)

காரிமங்கலம் அருகே தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பள்ளத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது54). விவசாயி. இவர் நேற்று மாலை தீபாவளி பண்டிகைக்கு குடும்பத்தினருக்கு புதிய துணிகள் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்றார்.

மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிவலிங்கம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற விவசாயி விபத்தில் இறந்ததால் அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.


Next Story