பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்தது: சுரேஷ் மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு


பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்தது: சுரேஷ் மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:00 PM GMT (Updated: 5 Nov 2019 5:36 PM GMT)

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்து சுரேசை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கு 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 3 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் கொள்ளை போனது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த கொள்ளையில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகனின் அக்காள் மகனான சுரேஷ், லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கைதாகி இருந்ததால் அவரை போலீஸ் காவலில் எடுத்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் 2-வது கட்டமாக சுரேசை கடந்த 30-ந் தேதி முதல் போலீஸ் காவலில் எடுத்து கொள்ளிடம் டோல்கேட் போலீசார் விசாரித்தனர். இதில் சுரேஷ் அளித்த தகவலின் படி ஒரு கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. கொள்ளை போன நகைகளில் இதுவரை 2½ கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில் கொள்ளையன் சுரேசுக்கு போலீஸ் காவல் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவகாம சுந்தரி முன்பு சுரேசை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மீண்டும் திருச்சி மத்திய சிறை அடைத்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். இந்த வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் டோல்கேட் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story