திருச்சிற்றம்பலம் பகுதியில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை


திருச்சிற்றம்பலம் பகுதியில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Nov 2019 11:00 PM GMT (Updated: 7 Nov 2019 5:32 PM GMT)

திருச்சிற்றம்பலம் பகுதியில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு, சித்து குளக்கரையில் பாக்கிய சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அண்மையில் தான் கும்பாபிஷேகம் நடந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் திருட வரும் காட்சி பதிவாகி உள்ளது.

இதேபோல களத்தூர் கிராமத்தில் ராக்காச்சி அம்மன், காத்தாயி அம்மன் ஆகிய 2 கோவில்களில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

மேலும் களத்தூர் அய்யனார் கோவில், சன்னாசி கோவில் ஆகிய கோவில்களில் பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள், பணத்தை திருடாமல் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சித்துக்காடு மற்றும் களத்தூர் கிராம மக்கள் தனித்தனியாக திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சிற்றம்பலத்தில் ஒரே நாளில் 3 கோவில்களில் பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story