சேலம் அருகே பயங்கரம் பெண் கழுத்தை அறுத்து கொலை கணவர் வெறிச்செயலா? போலீசார் விசாரணை


சேலம் அருகே பயங்கரம் பெண் கழுத்தை அறுத்து கொலை கணவர் வெறிச்செயலா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Nov 2019 10:15 PM GMT (Updated: 10 Nov 2019 8:03 PM GMT)

சேலம் அருகே வீராணத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரை அவருடைய கணவரே கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்,

சேலம் அருகே உள்ள வீராணம் போலீஸ் சரகம் அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 26), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மோகனேஸ்வரி (21). இவர்களுக்கு 3 வயதில் சிபு என்ற மகன் உள்ளான்.

கோபியும், அவரது மனைவியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். இருவேறு சமூகங்களை சேர்ந்த அவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோவையில் 3 ஆண்டுகள் வசித்து வந்தனர்.

அப்போது கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூரில் உள்ள தனது தந்தை ராமலிங்கம் வீட்டுக்கு மகன் சிபுவுடன் வந்து மோகனேஸ்வரி வசித்து வந்தார்.

கழுத்தை அறுத்து கொலை

பின்னர் மோகனேஸ்வரி, சேலத்தில் உள்ள துணிக்கடைஒன்றில் வேலை செய்து வந்தார். இதனிடையே நேற்று இரவு 10 மணி ஆகியும் மோகனேஸ்வரி வீட்டுக்கு திரும்பாததால் அவரது தந்தை பஸ் நிறுத்தத்துக்கு சென்றார். அப்போது செல்லும் வழியில், ஒருவர் கங்காபுதூர் பகுதியில் ஒரு பெண் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக அவருக்கு அந்த வழியாக சென்றவர் தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் அங்கு சென்று பார்த்த போது, வேலைக்கு சென்ற தனது மகள் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மோகனேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் வெறிச்செயலா?

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவரது கணவர் கோபி, நேற்று கங்காபுதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தது தெரியவந்துள்ளது. எனவே அவர் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் அவர் தனது மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து அவரது செல்போனை போலீசார் தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எனவே அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான் அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டாரா? அல்லது வேறு யாரேனும் செய்தார்களா? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வீராணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story