வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்


வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 9:44 PM GMT)

அரியாங்குப்பத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாரதி வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பாண்டியன் (வயது 26). கடந்த 6-ந் தேதி அங்குள்ள கைப்பந்து மைதானத்தில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் பாண்டியன் மீது வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

இந்த கொலை குறித்து பாண்டியனின் அண்ணன் வீரமணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாஞ்சாலையை சேர்ந்த சேது, கிருஷ்ணா, இந்திராநகர் சுரேந்தர், ஓடைவெளி அஸ்வின், சுப்பையா நகர் மோகன் பிரசாந்த், சண்முகா நகர் அருண், மணவெளி நரேஷ் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிரபல ரவுடி அஸ்வினின் கூட்டாளியான கிருஷ்ணா, சேது ஆகியோரை பாண்டியன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அஸ்வின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாண்டியனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி, அபிஷேகப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த அஸ்வின் (30), நரேஷ் (23), சுரேந்தர் (18) ஆகிய 3 பேரையும் 8ந்தேதி இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான சேது (22), கிருஷ்ணா (23) மற்றும் அருண் (22), மோகன் பிரசாத் (22) ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்கள் மரக்காணம் அருகே அனுமந்தை பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து சென்று சேது உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி அஸ்வினிடம் கொலைக்கு பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகள் எவ்வாறு கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், பாண்டியனை கொலை செய்ய அரிக்கன்மேடு மாந்தோப்பில் வைத்து 4 நாட்டு வெடிகுண்டுகளை தாங்களாவே தயாரித்ததாகவும், இதில் கொலைக்கு 2 வெடிகுண்டுகளை பயன்படுத்தி விட்டதாகவும், மீதி 2 குண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து அஸ்வின் கொடுத்த தகவலின்படி இருசாம்பாளையம் பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய 5 வீச்சரிவாள்கள், 2 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story