மழையால் சாலைகள் சேதம், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மழையால் சாலைகள் சேதம், நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2019 10:00 PM GMT (Updated: 3 Dec 2019 6:24 PM GMT)

தொண்டியில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொண்டி,

தொண்டியில் புதிய பஸ் நிலையம், வட்டாணம் சாலை மற்றும் அரசு மருத்துவமனை முன்பு உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து வந்தன. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இந்த சாலைகளில் மழைநீர் தேங்கி பெருமளவில் பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் இந்த சாலைகளில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இந்த சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிறைந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும்.

தொண்டி நகரின் மைய பகுதியில் உள்ள இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் பொதுமக்களின் நடமாட்டத்திற்கும், வாகனங்களின் போக்குவரத்திற்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அதன் பின்னர் சீரமைக்கப்படவில்லை.

எனவே இந்த சாலையின் முக்கியத்துவம் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story