மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை தாக்கி ரூ.55 லட்சம் கொள்ளை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை தாக்கி ரூ.55 லட்சம் கொள்ளை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:35 PM GMT)

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை வழிமறித்து, தாக்கி ரூ.55 லட்சத்தை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 38). விவசாயி. சின்னத்துரை தலைவாசல் அருகே புனல்வாசல் கிராமத்தில் 6 ஏக்கர் நிலத்தை ஒருவரிடம் இருந்து வாங்கினார். நிலம் வாங்கியதற்கு பணம் கொடுப்பதற்காக சென்னையில் உள்ள உறவினர் ஒருவரிடம் ரூ.55 லட்சம் கேட்டுள்ளார். இதற்காக சின்னத்துரை சென்னை சென்றார். அங்கு உறவினரிடம் ரூ.55 லட்சம் வாங்கியுள்ளார். அதை ஒரு பையில் வைத்துக்கொண்டார்.

பின்னர் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டார். நேற்று அதிகாலை 4.50 மணிக்கு தலைவாசல் அருகே நத்தக்கரை சுங்கச்சாவடிக்கு வந்து இறங்கினார்.

வழிமறித்தனர்

சுங்கச்சாவடி அருகில் ஏற்கனவே தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நத்தக்கரை வழியாக ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு தோட்டம் அருகில் சென்றபோது சாலையோர முட்புதரில் மறைந்திருந்த 4 பேர் திடீரென ரோட்டுக்கு வந்தனர். 4 பேரும் சேர்ந்து சின்னத்துரையின் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். இதை பார்த்த அவர் திடுக்கிட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்தினார். உடனே அந்த 4 பேரும் தாங்கள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சின்னத்துரை முகத்தில் வீசினர். பின்னர் கத்திைய காட்டி சின்னத்துரையை மிரட்டினர். அவருடைய வலது காலில் கத்தியால் குத்தினர். கையில் வைத்திருந்த சுத்தியலால் சின்னத்துரையின் மார்பில் தாக்கினர். இதனால் சின்னத்துரை நிலைகுலைந்து அதே இடத்தில் தரையில் உட்கார்ந்தார்.

கொள்ளை

பின்னர் அவர் வைத்திருந்த பணப்பையை கொள்ளையடித்தனர். அப்போது மேலும் 2 பேர் மோட்டார்சைக்கிள்களில் அங்கு வந்தனர். பணத்தை கொள்ளையடித்ததும் மோட்டார்சைக்கிள்களில் ஏறி 6 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அப்போது சின்னத்துரையின் செல்போனையும் பறித்துச்சென்றனர்.

சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த வழியாக வந்த பொதுமக்கள் சின்னத்துரை தாக்கப்பட்டு தரையில் கிடந்ததை பார்த்தனர். இதுபற்றி தலைவாசல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். சின்னத்துரையிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர் ரூ.55 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் சின்னத்துரையை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு கேமரா

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ அங்கு வந்து விசாரணை நடத்தினார். இதுபற்றி தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தில் ஒரேஇரவில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றனர். இந்தநிலையில் சின்னத்துரையிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story