திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப தேரோட்டம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப தேரோட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 10:15 PM GMT (Updated: 7 Dec 2019 5:10 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப தேரோட்டம் நேற்று நடந்தது. ஒரே நாளில் 5 தேர்களை பக்தர்கள் பரவசத்துடன் இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் முக்கிய விழாவாக கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. அன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது.

விழாவின் 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு 5 தேர்களும் வண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளினர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தேரை வடம்பிடித்து இழுப்பதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதனால் கோவில் மாடவீதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். காலை 7.05 மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பலத்த கோ‌‌ஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மாடவீதியை சுற்றி வந்து காலை 10.30 மணியளவில் விநாயகர் தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து காலை 11 மணியளவில் முருகர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதனை பக்தர்கள் பக்தி கோ‌‌ஷம் எழுப்பிய படி வடம் பிடித்து இழுத்தனர். பகல் சுமார் 2.45 மணிக்கு முருகர் தேர் நிலைக்கு வந்தது.

அதன் பின்னர் பெரிய தேரோட்டம் நடப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. தேரோட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் ஒரு புறமும் தேர் இழுப்பதற்காக தயார் நிலையில் நின்றனர். பிற்பகல் சுமார் 3.15 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் மகா ரத தேரோட்டம் தொடங்கியது. இதில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.ராமசந்திரன், நகர செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி பரவசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாடவீதி முழுவதும் பக்தர்கள் திரண்டு நின்றனர். இதனால் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர் அசைந்தாடி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

பெரிய தேர் நிலைக்கு வந்ததும் பராசக்தி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். அதைத்தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து அதில் குழந்தைகளை வைத்து மாட வீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஏராளமானோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வந்ததால் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திணறியது.

10-ந் தேதி நடைபெறும் மகாதீபத்தை காண 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை மூலம் செய்யப்பட்டு வருகிறது.

Next Story