போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்து ரூ.30 லட்சம் மோசடி திருச்சியை சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது


போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்து ரூ.30 லட்சம் மோசடி திருச்சியை சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2019 11:15 PM GMT (Updated: 14 Dec 2019 5:21 PM GMT)

போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்து ரூ.30 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக திருச்சியை சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் மாநகர பகுதியில் டி.வி. ஷோரூம்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் துணிக்கடைகள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தவணை முறையிலும் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இந்த வர்த்தக நிறுவனங்களில் நூதன முறையில் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் உள்ளிட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கடனாக பெற்று சிலர் ஏமாற்றி வருவதாக மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமாருக்கு புகார்கள் வந்தன.

இந்த மோசடி கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் திடீரென தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 7 பேர் கொண்ட கும்பல் இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 28), வேடசந்தூர் பகுதியை சேர்ந்த வரதராஜ பெருமாள் (33), வடமதுரை அண்ணாநகரை சேர்ந்த அருண் (22), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ராமு (23), தென்னம்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (22), மொட்டணம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (34), திருச்சி மாவட்டம் மணப்பாறை முத்தப்படையான்பட்டி காலனி தெருவை சேர்ந்த மதுபாலன் (23) என்பது தெரியவந்தது.

இந்த கும்பலிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் கடனுக்கு டி.வி., பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு செல்வார்கள். முன் பணமாக ரூ.2,500 கொடுத்துவிட்டு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்களை வாங்கிவிட்டு வீட்டு முகவரி என இவர்கள் போலியாக தயாரித்து வைத்திருக்கும் ஆதார் கார்டுகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

7 பேர் கைது

இதற்காக ஆதார் அட்டையில் வேறு ஒருவரது புகைப்படத்தை வைத்து கணினி மூலம் அதனை ஒரிஜினல் ஆதார் கார்டு போலவே மாற்றி கடைக்காரர்களிடம் கொடுத்து ஏமாற்றி வந்துள்ளனர். இவ்வாறு திண்டுக்கல்லில் சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் இவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 32 ஆதார் கார்டு, 7 பான்கார்டு, 7 வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வங்கி புத்தகம், கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதை துணை போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில் பார்வையிட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story