தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி


தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 14 Dec 2019 11:00 PM GMT (Updated: 14 Dec 2019 6:55 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சாவூர்,

இலங்கை அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது.

நேற்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் காலையில் மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் 11 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. பின்னர் மதியம் 2 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்தது.

சாலைகள் சேதம்

தஞ்சை, திருவையாறு, நெய்வாசல் தென்பாதி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, திருவிடைமருதூர், மஞ்சளாறு, மதுக்கூர், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.

தஞ்சை நகரில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலைகள் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலை , வெங்கடேச பெருமாள் கோவில் சாலை, கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் சாலை, தஞ்சை ரெயில் நிலையம் அருகே உள்ள சாலை, கீழவாசல் சாலை, வ.உ.சி.நகர் சாலை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.

வாகன ஓட்டிகள் அவதி

சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த சாலைகளில் பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது தவறி விழுந்த வண்ணமும் உள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-47, மஞ்சளாறு-45, அய்யம்பேட்டை-38, திருவிடைமருதூர்-34, திருவையாறு-29, கும்பகோணம்-27, தஞ்சாவூர்-23, மதுக்கூர்-20, நெய்வாசல் தென்பாதி-20, வெட்டிக்காடு-19, பேராவூரணி-16, அதிராம்பட்டினம்-16, கல்லணை-15, வல்லம்-13, அணைக்கரை-13, குருங்குளம்-12, பூதலூர்-11, திருக்காட்டுப்பள்ளி-11, பட்டுக்கோட்டை-8, ஈச்சன்விடுதி-2.

Next Story