திட்டக்குடி அருகே, ஏரியில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை


திட்டக்குடி அருகே, ஏரியில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2019 10:15 PM GMT (Updated: 15 Dec 2019 8:29 PM GMT)

திட்டக்குடி அருகே ஏரியில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மனைவி தேன்மொழி (வயது 45). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விளை நிலம் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தேன்மொழி விளை நிலத்திற்கு சென்று வருவதாக தனது குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றார். அதன் பிறகு இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு இடங்களில் தேன்மொழியை தேடினர். இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஏரியில் தேன்மொழி பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பெருமாள் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் இறங்கி, பிணமாக மிதந்த தேன்மொழியின் உடலை மீட்டனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேன்மொழி ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து உடலை ஏரியில் வீசிச்சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் பெண் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story