பிள்ளபாளையம் பிடாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


பிள்ளபாளையம் பிடாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 20 Jan 2020 11:00 PM GMT (Updated: 20 Jan 2020 7:10 PM GMT)

பிள்ளபாளையம் பிடாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பிள்ளபாளையத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர் திருவிழா மற்றும் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திம்மாச்சிபுரத்தை சேர்ந்த கோவில் பூசாரி குமாரசாமி பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்று விட்டார்.

கொள்ளை

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க பூசாரி வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும், அலாரம் ஒலிக்காமல் இருப்பதற்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story